இந்தியா

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம்

Published On 2025-04-12 13:56 IST   |   Update On 2025-04-12 13:56:00 IST
  • பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் காஷ்மீரில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
  • அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிஷ்த்வார் மாவட்டம் தந்து என்ற பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இப்பகுதியை பாதுகாப்பு படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் கூட்டாக இணைந்து சுற்றி வளைத்து பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுக்குள் மறைந்து இருந்த பயங்கரவாதிகள் அவர்களை பார்த்து துப்பாக்கியால் சுட்டனர்.

பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கியால் சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த சண்டையில் நேற்று ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இன்று அதிகாலை மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவர் ஜெய்ஷ்-இ-முகமது இயக்க கமாண்டர் என்றும், அவரது பெயர் சைபுல்லா என்றும் தெரிய வந்தது. மற்றவர்கள் பெயர் பர்மான், பாஷா ஆகும். இவர்களது தலைக்கு தலா ரூ.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது.

அவர்களிடம் இருந்து நவீனரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கைப்பற்றப் பட்டதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர். அப்பகுதியில் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் அக்னூர் பகுதியில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ஊடுருவல் முயற்சியை தடுத்த ராணுவ வீரர் ஒருவர் குண்டு பாய்ந்து பலியானார். அவரது பெயர் குல்தீப்சந்த் ஆகும். இந்த துப்பாக்கி சண்டையில் ஜூனியர் ராணுவ அதிகாரி ஒருவரும் காயம் அடைந்தார்.

Tags:    

Similar News