இந்தியா

என்னை அழ வைத்தவர்களுக்கு கண்ணீர் வரவழைத்தால் தான் ஆன்மா சாந்தி அடையும்: தேவகவுடா உருக்கம்

Published On 2023-04-26 03:43 GMT   |   Update On 2023-04-26 03:43 GMT
  • துமகூரு மாவட்டம் மதுகிரி தொகுதியில் தேவகவுடா கலந்துகொண்டு உருக்கமாக பேசினார்.
  • துமகூரு மாவட்டத்தில் 10 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை மக்கள் தர வேண்டும்.

துமகூரு :

துமகூரு மாவட்டம் மதுகிரி தொகுதி ஜனதாதளம் (எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து டி.கைமாராவில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அக்கட்சிவேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா கலந்துகொண்டு உருக்கமாக பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 1995-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது துமகூரு மாவட்டத்தில் 9 இடங்களில் வெற்றியை இந்த மக்கள் வழங்கினார்கள். மாநிலத்தின் வளர்ச்சிக்காக பஞ்சரத்ன யோஜனா திட்டத்தைசெயல்படுத்த நினைக்கும் குமாரசாமி, இனி முதல்-மந்திரி ஆவார். துமகூரு மாவட்டத்தில் 10 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றியை மக்கள் தர வேண்டும்.

ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு ஒட்டு மொத்தமாக இந்த தேர்தலில் 20 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று காங்கிரஸ், பா.ஜனதாவினர் கூறிவருகிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மூட்டு வலியால் எழுந்து கூட நிற்க முடியாத நிலையில் இருந்தேன். ஆனால் சிலர் என்னை துமகூரு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும்படி வற்புறுத்தினர். இதனால் நான் இங்கு வந்து போட்டியிட்டேன்.

ஆனால் தோல்வி அடைந்தேன். என்னை தேர்தலில் தோற்கடித்ததை நினைத்து நான் கண்ணீர்விட்டேன். என்னை அழவைத்தவர்களை இந்த தேர்தலில் ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு வாக்களித்து அழ வைக்க வேண்டும். அப்போது தான் என் ஆன்மா சாந்தி அடையும்.

இவ்வாறு அவர் உருக்கமாக பேசினார்.

அதாவது, மதுகிரி காங்கிரஸ் வேட்பாளர் ராஜண்ணாவை வீழ்த்த தேவகவுடா மறைமுகமாக இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News