ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு ரத்தம் வழங்க ஒடிசாவுக்கு விரைந்த தன்னார்வலர்கள்
- ரெயில் விபத்தில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.
- ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருக்கிறார்கள்.
ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டம் பஹானகா பஜார் ரெயில் நிலையம் அருகே நேற்று இரவு நடந்த ரெயில் விபத்தில் 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அவர்களில் பலரும் பாலாசோர் மற்றும் அதை சுற்றியுள்ள ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் பலருக்கும் கை, கால்கள் உடைந்தும், தலையில் அடிபட்டும் ரத்தம் வீணாகி உயிருக்கு போராடி வருகிறார்கள்.
இவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏராளமான யூனிட் ரத்தம் தேவைபடுகிறது. இதுபற்றிய தகவல் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதனை அறிந்த தன்னார்வலர்கள் பலர் நேற்றிரவே ஒடிசா சென்றனர். அங்கு அரசு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று ரத்த தானம் செய்தனர். இதனை ஒடிசா மாநில தலைமை செயலாளர் பிகே ஜெனா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் சுமார் 500 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டதாகவும், இன்னும் ஏராளமானோர் ரத்த தானம் செய்ய காத்திருப்பதாகவும் கூறினார். தற்போது இப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் ஆயிரம் யூனிட் ரத்தம் இருப்பதாகவும், தேவைப்படுவோருக்கு அவை உடனடியாக வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.