இந்தியா

ஜெய்ப்பூரில் 6-ந்தேதி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை- கார்கே, சோனியா, ராகுல் வெளியிடுகிறார்கள்

Published On 2024-03-29 05:18 GMT   |   Update On 2024-03-29 05:18 GMT
  • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.
  • பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன.

ஜெய்ப்பூர்:

காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையை இந்த தடவை மிகவும் வித்தியாசமான கோலத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. புதிய அம்சங்களுடன் தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவினர் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரிடமும் கருத்து கேட்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர். சமீபத்தில் அந்த அறிக்கை காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

வருகிற 6-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இதற்கான விழா நடக்கிறது. அதில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் ஆகியோர் பங்கேற்று தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக நேற்று காங்கிரஸ் தலைவர்கள் டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தேர்தல் அறிக்கைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் ஆகிய 3 பிரிவினர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதிமொழி அளிக்கப்பட உள்ளது.

அதுபோல பெண்களுக்கு மாதம் உதவி தொகை கொடுப்பது பற்றி அறிவிப்புகள் வர உள்ளன. இதனால் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News