ராஜஸ்தான், சத்தீஸ்கரில் வெற்றிபெற பா.ஜனதா சதி செய்கிறது: அசோக் கெலாட் குற்றச்சாட்டு
- காங்கிரஸ் ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை.
- குர்ஜார் சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.
ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் இன்று காங்கிரஸ் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற பா.ஜனதா சதி செய்கிறது. மஹாதேவ் சூதாட்ட செயலியும், சிவப்பு டைரி விவகாரமும் பா.ஜனதாவால் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு விவகாரங்களும் ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியால் விசாரிக்கப்பட வேண்டும்.
ராஜேஷ் பைலட் குறித்து பேசுவதன் மூலம் குர்ஜார் சமூக மக்களை பிரதமர் மோடி தூண்டிவிட முயற்சிக்கிறார். பா.ஜனதா ஆட்சியில் இட ஒதுக்கீடு கேட்டு போராடிய குர்ஜார் சமூகத்தை சேர்ந்த 72 பேர் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் மரணம் அடைந்தனர். இன்று அந்த சமூக மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல் பா.ஜனதாவினர் பேசி வருகின்றனர்.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது எந்தவித தாக்குதலும் நடத்தப்படவில்லை. குர்ஜார் சமூக மக்களுக்கு காங்கிரஸ் அரசு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.
சதி கோட்பாடுகளை உருவாக்கி மக்களை தவறாக வழி நடத்துவதன் மூலம் தேர்தலில் வெற்றிபெற பா.ஜனதா நினைக்கிறது.
இவ்வாறு அசோக் கெலாட் கூறியுள்ளார்.