இந்தியா

ரூ.20 லட்சம் கோடி ஊழல் உத்தரவாதம்: எதிர்க்கட்சிகள் ஒற்றுமை குறித்து பிரதமர் மோடி கிண்டல்

Published On 2023-06-28 05:20 GMT   |   Update On 2023-06-28 05:20 GMT
  • பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர்
  • ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாக முயற்சி செய்கின்றன

பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள முக்கிய நகரங்களை இணைக்கும் 5 வந்தே பாரத் ரெயில்களை மத்திய பிரதேசத்தின் தலைநகர் போபாலில் இருந்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவற்றில் 2 ரெயில்களை மத்திய பிரதேசதிற்கானது.

அதற்கு பிறகு பா.ஜ.க. 'பூத்' ஊழியர்களுடன் உரையாடியபோது, மோடி, எதிர்கட்சிகளை மிகவும் கடுமையாக விமர்சித்தார். இதில் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து விமர்சித்து அவர் கூறியதாவது:-

இப்போதெல்லாம், ஒரு புதிய வார்த்தை பிரபலமாகி இருக்கிறது. அந்த வார்த்தை என்னவென்றால் உத்தரவாதம். இதனை ஊழல் பற்றிய உத்தரவாதம் (எதிர்கட்சிகளின் ஒற்றுமை) என்று மக்களுக்குச் சொல்ல வேண்டியது பா.ஜ.க.வினர்களின் பொறுப்பு. இது 'லட்சம் கோடி ஊழல்' பற்றிய உத்தரவாதம்.

சில நாட்களுக்கு முன் இவர்கள் (எதிர்கட்சிகள்) அனைவரும் கூடிய 'போட்டோ-ஆப்' நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் சேர்ந்ததிலிருந்தே, குறைந்தது ரூ.20 லட்சம் கோடி ஊழல் நடப்பது உறுதி என்பதை நீங்கள் உணர்வீர்கள். இதில் காங்கிரஸ் மட்டுமே பல லட்சம் கோடி ஊழல் செய்துள்ளது.

பாட்னா கூட்டத்தில் அனைத்து ஊழல்வாதிகளும் கைகோர்த்தனர். ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாக முயற்சி செய்கின்றன. ஊழல் தலைவர்கள் ஒருவரையொருவர் காப்பாற்ற முயற்சிக்கின்றனர்.

எதிர்க்கட்சிகள் 'உத்தரவாதம்' கொடுப்பதுபோல், அனைவருக்கும் நான் ஒரு 'உத்தரவாதம்' தருகிறேன். அது என்னவென்றால், நான் அவர்களில் (ஊழலில் ஈடுபட்டவர்கள்) யாரையும் விட்டு வைக்க மாட்டேன். ஒவ்வொரு மோசடியாளரையும் நான் கடுமையாக தண்டிப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜூன் 23-ந்தேதி பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். அந்த எதிர்க்கட்சி கூட்டத்தை மனவில் வைத்து மோடி இவ்வாறு தனது கடுமையனா விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags:    

Similar News