இந்தியா

மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்ற காட்சி.

மத்தியபிரதேசத்தில் காங்கிரஸ் 150 தொகுதிகளை கைப்பற்றும்: ராகுல் காந்தி உறுதி

Published On 2023-05-30 02:56 GMT   |   Update On 2023-05-30 02:56 GMT
  • கர்நாடகாவில் தொடங்கிய காங்கிரசின் வெற்றி பயணம், மத்தியபிரதேசத்திலும் தொடரும்.
  • கர்நாடகாவில் அறிவித்தது போன்ற சலுகைகள், மத்தியபிரதேசத்திலும் அறிவிக்கப்படும்.

புதுடெல்லி :

பா.ஜனதா ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் இன்னும் 4 மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.

கர்நாடகாவை தொடர்ந்து, மத்தியபிரதேசத்திலும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் விரும்புகிறது. இதுதொடர்பாக ஆலோசனை நடத்த டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று கூட்டம் நடந்தது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மேலிட பொறுப்பாளர் அகர்வால், முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், நிர்வாகிகள் அனைவரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர். ஒற்றுமையாக போட்டியிட்டு, வெற்றியை தேடித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கூட்டம் முடிவடைந்த பிறகு, ராகுல்காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

கர்நாடகாவில் 136 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்தோம். அது அப்படியே நடந்தது. அதுபோரல், மத்தியபிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில், 150 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கணித்துள்ளோம்.

கர்நாடகாவில் தொடங்கிய காங்கிரசின் வெற்றி பயணம், மத்தியபிரதேசத்திலும் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

''மத்தியபிரதேச சட்டசபை தேர்தலுக்கு காங்கிரசின் முதல்-மந்திரி வேட்பாளராக கமல்நாத் இருப்பாரா?'' என்ற கேள்விக்கு ராகுல்காந்தி பதிலளிக்கவில்லை.

முன்னாள் முதல்-மந்திரி கமல்நாத் கூறியதாவது:-

தேர்தலுக்கான வியூகம் குறித்தும், என்னென்ன பிரச்சினைகளை பற்றி பேசுவது என்றும் விவாதித்தோம். ஒற்றுமையாக செயல்படுவது என்று முடிவு செய்துள்ளோம்.

கர்நாடகாவில் அறிவித்தது போன்ற சலுகைகள், மத்தியபிரதேசத்திலும் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News