ஜம்மு எல்லையில் ரூ.40 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பொட்டலங்களை வீசிச் சென்ற பாகிஸ்தான் டிரோன்
- எல்லையோர கிராம மக்கள் தகவல் அளித்தனர்.
- பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் சுமார் ரூ. 40 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ ஹெராயினை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நேற்று, இரவு எல்லையோர கிராம மக்கள் சிலர், டிரோன் ஒன்று பறப்பதையும், அது ஒரு பொட்டலத்தைக் கீழே போடுவதையும் கவனித்து பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் அளித்தனர்.
எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் ஜம்மு-காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய தீவிர சோதனையில், விவசாய நிலங்களில் இருந்து அந்த ஹெராயின் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டன.
அதேநேரம், மற்றொரு சம்பவத்தில், கதுவா மாவட்ட எல்லைப் பகுதியில் டிரோன் மூலம் போதைப்பொருள் கடத்திய புகாரில் ஜதின் மற்றும் டேனிஷ் டோக்ரா ஆகிய இருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்கள் பாகிஸ்தான் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து டிரோன்கள் மூலம் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களைக் கடத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது.