இந்தியா

எல்லையை நோக்கி படையை நகர்த்தும் பாகிஸ்தான்: பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை- அதிகரிக்கும் பதற்றம்..!

Published On 2025-05-10 14:23 IST   |   Update On 2025-05-10 14:23:00 IST
  • பாகிஸ்தான் ஃபட்டா பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல்.
  • பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சரமாரி தாக்குதல் நடத்தியது. கடந்த 7ஆம் தேதி 1.05 மணி முதல் 1.30 மணி வரை 25 நிமிடத்திற்குள் 26 தாக்குதல் நடத்தி 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவியது. இந்த நிலையில் 7ஆம்தேதி இரவு பாகிஸ்தான் இந்தியா எல்லையில் அத்துமீறி தாக்கதல் நடத்தியது. அத்துடன் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியது. நேற்று முன்தினமும் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடித்த இந்தியா, தக்க பதிலடியும் கொடுத்து வருகிறது.

பாகிஸ்தான் நேற்று உச்சகக்ட்டமாக பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், குஜராத், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள எல்லைப் பகுதிகளை குறிவைத்து டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அத்துடன் டெல்லியை நோக்கி பாலிஸ்டிக் ஏவகணையான ஃபட்டா-2 மூலம் தாக்குதல் நடத்தியது. இது அதிவேக ஏவுகணை ஆகும். 400 கி.மீ. தூரத்தை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டதாகும். இதை இந்தியா வானில் இடைமறித்து அழித்தது.

நேற்று வழிபாட்டு தலங்கள், மருத்துவ கட்டமைப்புகள், ராணுவ தளங்கள், பொதுமக்கள் வசிக்கும் இடங்களை குறிவைத்து தாக்குதால் நடத்த முயற்சித்தது என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடியாக இந்தியா பாகிஸ்தான் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் மென்மேலும் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில்தான் பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லை நோக்கி நகர்த்தி வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ஒருவேளை தரைவழி தாக்குதலுக்கு தயாராகிறதோ? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனால் பிரதமர் மோடி பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தளபதிகள், ராஜ்நாத் சிங் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். ஒருவேளை பாகிஸ்தான் தாக்குதலை அதிகரித்தால் தற்போதுள்ள அறிவிக்கப்படாத போர், அதிகாரிப்பூர்வமாக போர் அறிவிப்பாக மாறலாம்.

இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

Similar News