ஆபரேஷன் சிந்து: ஈரானில் இருந்து டெல்லி வந்த மேலும் 290 இந்தியர்கள்
- ஈரான், இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
- இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக குற்றம்சாட்டி கடந்த 13-ம் தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. ஈரானும் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானில் இதுவரை 585 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதேபோல், இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
இதனால் ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய தூதரகம் ஆபரேஷன் சிந்து மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்து மூலம் ஈரானில் உள்ள மஷாதில் இருந்து மேலும் 290 இந்தியர்கள் நேற்று நள்ளிரவு பத்திரமாக தலைநகர் டெல்லி வந்தடைந்தனர். இதுவரை சுமார் 1,117 இந்தியர்கள் இந்தியா வந்துள்ளனர் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.