அப்துல் கலாம் கனவு கண்ட இந்தியாவை கட்டியெழுப்புவோம் - பிரதமர் மோடி
- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம்.
- வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நினைவூட்டுகிறது.
ராமேசுவரத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இந்தியாவின் உயரிய பதவியான குடியரசு தலைவர் பதவியை அலங்கரித்தவர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ), இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் தலைமை விஞ்ஞானியாக இருந்து ஏவுகணை திட்டங்களை திறம்பட செயல்படுத்தியதால் இந்தியாவின் ஏவுகணை நாயகனாக அறியப்பட்டார். அவருக்கு இளைஞர்கள், மாணவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு இருந்தது. இதனால் அவர்களோடு உரையாடி வந்தார்.
இன்று ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். இளைஞர்களை தூண்டி, நம் தேசத்தைப் பெரிய கனவு காணத் தூண்டிய தொலைநோக்கு பார்வையாளராக அவர் நினைவுகூரப்படுகிறார். வெற்றிக்கு பணிவும் கடின உழைப்பும் மிக முக்கியம் என்பதை அவரது வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது. அவர் கனவு கண்ட இந்தியாவை... வலிமையான, தன்னம்பிக்கை கொண்ட மற்றும் இரக்கமுள்ள இந்தியாவை நாம் தொடர்ந்து கட்டியெழுப்புவோம்" என்று பதிவிட்டுள்ளார்.