இந்தியா

 சிறுமியை கடத்திக்கொண்டு காரில் சென்ற போது பதிவான சி.சி.டி.வி. காமிரா காட்சியையும் படத்தில் காணலாம்.

ரூ.10லட்சம் கேட்டு கடத்தல்: "மொட்டை மாமா" என்று சிறுமி கொடுத்த தகவலால் சிக்கிய கடத்தல்காரர்

Published On 2023-12-02 07:26 GMT   |   Update On 2023-12-02 07:26 GMT
  • சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கொச்சி ஒயூர் பகுதியை சேர்ந்தவர் ரெஜி ஜான். இவரது மகள் அபிகேல் சாரா(வயது6) கடந்த 27-ந்தேதி மாலை, தனது சகோதரருடன டியூசனுக்கு நடந்து சென்றபோது காரில் வந்த கும்பலால் கடத்தப்பட்டாள்.

சிறுமியை கடத்திய கும்பல், சிறுமியின் தாயை செல்போனில் தொடர்பு கொண்டு ரூ10லட்சம் கேட்டு மிரட்டியது. சிறுமி கடத்தப்பட்ட சம்பவம் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் மாநிலம் முழுவதும் உஷார் படுத்தப்பட்டனர். சிறுமியின் சகோதரன் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. கேமிராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் பயன்படுத்திய கார் கண்டறியப்பட்டது.

சிறுமியின் சகோதரன் மற்றும் பலர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கடத்தல்காரர்கள் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கொல்லம் பகுதியில் தனியாக நின்ற சிறுமி சாராவை போலீசார் மீட்டனர்.

அவளை கடத்தல்காரர்கள் அந்த இடத்தில் விட்டுவிட்டு தப்பிச் சென்றனர். சிறுமி மீட்கப்பட்ட நிலையில், அவளை கடத்தியவர்களை பிடிக்க போலீஸ் டிஐ.ஜி. நிசாந்தினி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுமியிடம் கடத்தல்காரர்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டனர்.

அப்போது சிறுமி கடத்தல்காரர்களில் ஒரு ஆண் மொட்டை மாமா என்று கூறினார். போலீசார் வரைந்த வரைபம், சிறுமி கூறிய தகவல்களின் அடிப்படையில் விசாரித்த போது சிறுமியை கடத்தியது சாத்தனூரை சேர்ந்த பத்ம குமார்(52) என்பது தெரிய வந்தது.

அவரை தேடி போலீசார் சென்றபோது அவர் தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்ட விவரம் தெரிந்தது. அவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியரையில் அவர்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

அங்குள்ள ஒரு உணவகத்தில் வைத்து பத்மகுமார், அவரது மனைவி அனிதா, மகள் அனுபமா ஆகிய 3 பேரையும் போலீசார் சுற்றி வளைத்தனர். பத்ம குமாரிடம் விசாரித்த போது, சிறுமியை கடத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.

சிறுமியின் தந்தையுடன் தனக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்சினை இருந்ததும், அதன் காரணமாகவே சிறுமியை கடத்தியதாகவும் தெரிவித்தார். பத்மகுமார் தனது மகளை நர்சிங் சேர்ப்பதற்காக ரெஜி ஜானிடம் ரூ5லட்சம் கொடுத்திருக்கிறார்.

ஆனால் அவர் நர்சிங் சேர்க்கை வாங்கித் தரவில்லை. மேலும் அதற்காக வாங்கிய பணத்தை திருப்பியும் கொடுக்கவில்லை. அந்த பணத்தை திரும்பி வாங்குவதற்கு ஒரு ஆண்டாக ரெஜி ஜானிடம் கேட்டு வந்திருக்கிறார். ஆனால் பணத்தை அவர் திருப்பி கொடுக்கவில்லை.

இதன்காரணமாக அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. அந்த பிரச்சினை காரணமாகவே ரெஜி ஜானின் மகளை பத்மகுமார் கடத்தியது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து பத்மகுமாரை போலீசார் கைது செய்தனர். சிறுமி கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடத்தலில் தனது மனைவி மற்றும் மகளுக்கு தொடர்பு இல்லை என்று போலீசாரிடம் பத்மகுமார் தெரிவித்திருக்கிறார். இருந்தபோதிலும் பத்ம குமார், அவரது மனைவி மற்றும் மகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தலில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று பத்ம குமார், அவரது மனைவி மற்றும் மகளிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Tags:    

Similar News