இந்தியா

கைது நடவடிக்கை்கு எதிராக கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க நோட்டீஸ்

Published On 2024-03-27 09:02 GMT   |   Update On 2024-03-27 09:02 GMT
  • அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கெஜ்ரிவாலை கைது செய்தனர்.
  • 28-ந்தேதி (நாளை) வரை அமலாக்கத்துறை காவலுக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த 21-ந்தேதி கைது செய்தது. அவரை 28-ந்தேதி வரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கிடையே கைதை எதிர்த்தும், அமலாக்கத்துறை காவலில் வைத்துள்ளது சட்டவிரோதம் என்றும், உடனடியாக விடுதலை செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு இன்று காலை நீதிபதி ஸ்வர்ண காந்தா சர்மா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமலாக்கத்துறையின் காவல் நாளையுடன் முடியும் நிலையில் இன்றே உத்தரவு பிறப்பிக்க முதல்-மந்திரி கெஜ்ரிவால் தரப்பு கோரிக்கை விடுத்தது.

அமலாக்கத்துறை தரப்பு கூறும்போது, கெஜ்ரிவாலின் மனுவின் நகல் நேற்றுதான் கிடைத்தது. எனவே விரிவான பதில் அளிக்க 3 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டது.

இதையடுத்து கைது நடவடிக்கைக்கு எதிராக இடைக்கால நிவாரணம் வழங்க வழக்கை முன் கூட்டியே விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத்துறை பதில் அளிக்க நீதிபதி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Tags:    

Similar News