கர்நாடகாவில் டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு- நள்ளிரவு முதல் அமல்
- கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.
பெங்களூரு:
சித்தராமையா தலைமையிலான இந்த அரசு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பஸ் பயணம், 10 கிலோ இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை, இல்லத்தரசிகளுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை ஆகிய 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இந்த உத்தரவாத திட்டங்களால் அரசுக்கு செலவு அதிகமாகி வருகிறது. இதனால் அரசின் நிதி நிலை மோசமாகி வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் கர்நாடக அரசு பஸ், மின்சாரம், மெட்ரோ ரெயில் கட்டணங்கள், பால் விலையை உயர்த்தி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
அதாவது கடந்த ஜனவரி மாதம் பஸ் கட்டணமும், அதற்கு அடுத்து பிப்ரவரி மாதம் பெங்களூருவில் மெட்ரோ ரெயில் கட்டணமும் உயர்த்தப்பட்டது. அதைதொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மின்சார கட்டணம் யூனிட்டுக்கு 36 காசும், பால் விலை லிட்டருக்கு ரூ.4-ம் அதிகரித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதுபோல் பெங்களூருவில் குப்பை கழிவுகளுக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தியால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய நிதி ஆண்டு தொடங்கிய முதல் நாளான நேற்று முதலே விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளதால் அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் நேற்று முதல் சுங்கச்சாவடி கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது பெங்களூரு-மைசூரு, பெங்களூரு-திருப்பதி, பெங்களூரு-தேவனஹள்ளி சாலைகளில் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் 3 சதவீதம் முதல் 5 சதவீதம் வரை சுங்கச்சாவடி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடக அரசு டீசல் மீதான விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. தற்போது ஒரு லிட்டர் டீசலுக்கு கர்நாடக அரசின் விற்பனை வரி 18.44 சதவீதமாக உள்ளது. அது 21.17 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. அதாவது தற்போது 2.73 சதவீதம் விற்பனை வரி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதன்படி ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.2 அதிகரித்துள்ளது. அதாவது ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.89.02-ல் இருந்து ரூ.91.02 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு உடனடியாக நள்ளிரவு முதலே அமலுக்கு வந்துள்ளது.
இந்த விலையை உயர்த்திய பிறகும் தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் கர்நாடகத்தில் டீசல் விலை குறைவாக உள்ளதாக அரசு தனது முடிவை நியாயப்படுத்தியுள்ளது.
பால் விலை, மின்சார கட்டணம், குப்பைக்கு வரி விதிப்பு ஆகியவை நேற்று அமலுக்கு வந்த நிலையில் அரசு தற்போது டீசல் விலையை உயர்த்தி மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது.