இந்தியா

ஈரான் சிறைப்பிடித்த கப்பலில் 17 இந்தியர்கள்: தூதரக அளவில் இந்திய அரசு பேச்சுவார்த்தை

Published On 2024-04-13 16:23 GMT   |   Update On 2024-04-13 16:23 GMT
  • இஸ்ரேல் தொடர்பான கப்பலை ஈரான் சிறைப்பிடித்து வைத்துள்ளது.
  • சிறைப்பிடித்துள்ள சரக்கு கப்பலில் 17 இந்தியர்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது. காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஹிஸ்புல்லா உள்ளிட்ட அமைப்புகளுக்கு ஈரான் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த அமைப்புகள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இதனால் சிரியா, லெபனான் உள்ளிட்ட நாடுகளில செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு பெற்ற அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன் சிரியாவில் உள்ள ஈரான் தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஈரான் படையின் இரண்டு முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலை இஸ்ரேல்தான் நடத்தியது என ஈரான் குற்றம் சாட்டியது. மேலும், தக்க பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், பக்ரைன் நடுவே உள்ள கடற்பகுதியின் ஓர்முஸ் ஜலசந்தியில் இஸ்ரேல் தொடர்புடைய கப்பல் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலை ஈரான் ராணுவம் சிறைப்பிடித்துள்ளது. இதனால் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கப்பலில் உள்ள 17 இந்தியர்களை பத்திரமாக மீட்பது குறித்து ஈரானுடன் பேசி வருவதாக இந்தியா தெரிவித்துள்ளார்.

எம்எஸ்சி ஏரிஸ் என்ற சரக்கு கப்பல் ஈரான் கட்டுப்பாட்டில் இருப்பதை நாங்கள் அறிவோம். அதில் 17 இந்தியர்கள் இருப்பதாக எங்களுக்கு தெரியவந்துள்ளது. இந்தியர்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் விரைவாக விடுதலை ஆகியவற்றை உறுதி செய்வதற்காக தெஹ்ரான் மற்றும் டெல்லியில் உள்ள தூதரக வழிகளில் ஈரானிய அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம் என இந்திய அரசு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல்- ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியர்கள் ஈரான் மற்றும் இஸ்ரேல் பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News