இந்தியா

சதீசன்                பினராயி விஜயன்

தங்கம் கடத்தல் வழக்கு: கேரள முதலமைச்சர் மீது எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு

Published On 2022-06-10 22:32 GMT   |   Update On 2022-06-11 01:23 GMT
  • கேரள முதலமைச்சருக்கு எதிராக சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பவர்களை அரசு அச்சுறுத்த முயற்சிக்கிறது.
  • தங்கம் கடத்தல் விவகாரத்தில் பினராயி அரசு பயப்படுகிறது

கொச்சி:

கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தங்க கடத்தல் வழக்கில் தூதரக முன்னாள் பெண் அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்ட ஸ்வப்னா கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் ரகசிய வாக்குமூலம் அளித்தார்.

அதில் கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு இந்த வழக்கில் நேரடி தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் பினராயி விஜயனுக்கு நெருக்கமான ஷாஜ் கிரண் என்பவர் தன்னை சந்தித்து பேசியதாகவும், அப்போது கோர்ட்டில் அளித்த ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெற்றால் தன்மீதான வழக்குகள் அனைத்தையும் இல்லாமல் செய்துவிட ஏற்பாடு செய்வதாக அவர் கூறியதாகவும், இது தொடர்பான ஆடியோ பதிவு தன்னிடம் இருப்பதாகவும் ஸவப்னா தெரிவித்திருந்தார்.

இதையடுத்து முதலமைச்சர் பதவியில் இருந்து பினராயி விஜயன் விலக கோரி அம்மாநில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே ஸ்வப்னா மீது கேரள முன்னாள் மந்திரி ஜலீல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு எதிராக சாட்சியம் அளிக்கத் தயாராக இருப்பவர்களை இடதுசாரி அரசு அச்சுறுத்த முயற்சிக்கிறது என்று அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீசன் குற்றம் சாட்டியுள்ளார்.

முதலமைச்சருக்கு எதிராக குற்றம் சாட்டிய ஒருவர் கடத்தப்பட்டார், அவரது போன் பறிக்கப்பட்ட நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.  அரசுக்கு எதிரான ஆதாரம் இருப்பதால்தான் இவற்றைச் செய்கிறார்கள் என்றும், தங்கம் கடத்தல் விவகாரத்தில் பினராயி அரசு பயப்படுவதே இதற்குக் காரணம் என்றும் சதீசன் குறிப்பிட்டுள்ளார்

Tags:    

Similar News