இந்தியா

Gas Shortage | சிலிண்டர் பற்றாக்குறை: மத்திய அமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்

Published On 2026-03-10 16:23 IST   |   Update On 2026-03-10 16:25:00 IST
  • பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தபட்டுள்ளன.
  • ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகளுக்கு கியாஸ் விநியோகம் தடைபட்டுள்ளது.

அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.

இந்த நிலையில் வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் கியாஸ் விநியோக்கும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

அதன்படி மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. இதன் காரணமாக பெங்களூருவில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் ஓட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான LPG கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், "லட்சக்கணக்கான மக்களுக்காக தினமும் இயங்கும் ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு கியாஸ் விநியோகம் தடைபட்டுள்ளது. போதுமான வணிக சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News