ஈரான்-அமெரிக்கா போர் எதிரொலி: ஏர் இந்தியா விமான கட்டணம் அதிரடி உயர்வு #AirIndia
- ஈரான்-அமெரிக்கா போரால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
- இதன் காரணமாக எண்ணெய் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
ஈரான்-அமெரிக்கா போரால் வளைகுடா நாடுகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தை 20 சதவீதம் கையாளும் ஹார்மூஸ் நீரிணையும் மூடப்படுவதாக ஈரான் அறிவித்துள்ளதால் கச்சா எண்ணெய் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச அளவில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் தற்போது எரிபொருளுக்கு கூடுதல் கட்டணத்தை அறிவித்துள்ளது.. உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த கூடுதல் கட்டணத்தை அறிவித்துள்ளது.
ஜெட் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் இந்தக் கூடுதல் கட்டணம் கொண்டு வரப்பட்டுள்ளது என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
கூடுதல் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது தங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. அதேநேரம் தவிர்க்க முடியாது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று கட்டமாக இந்தக் கூடுதல் கட்டணம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கு எரிபொருள் கூடுதல் கட்டணமாக 10 டாலர் விதிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்களுக்கான சர்ஜார்ஜ் 30 டாலரில் இருந்து 90 டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. தெற்காசிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்களுக்கான கட்டண உயர்வு 20 டாலரில் இருந்து 60 டாலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூடுதல் கட்டணம் அவ்வப்போது ஆய்வு செய்யப்பட்டு, நிலமை மேம்பட்டால் அதற்கு ஏற்ப மாற்றம் செய்யப்படும் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.