இந்தியா

பாத்ரூம் சுத்தம் செய்யும் கெமிக்கலில் நெய் தயாரிப்பு.. திருப்பதி லட்டு குறித்து சந்திரபாபு நாயுடு புது தகவல்

Published On 2026-02-06 18:11 IST   |   Update On 2026-02-06 18:12:00 IST
  • விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்தது.
  • புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய்யின் தரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளார்.

கர்னூல் மாவட்டம் களுகோட்லாவில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய சந்திரபாபு நாயுடு, முந்தைய ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சிக் காலத்தில், திருப்பதி லட்டு தயாரிப்பதற்காகக் கொள்முதல் செய்யப்பட்ட நெய், பாத்ரூம் சுத்தம் செய்யப் பயன்படும் ரசாயனங்களை கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

நெய் மாதிரிகளைப் பரிசோதனை செய்தபோது, அதில் விலங்குகளின் கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் சோயா எண்ணெய் போன்றவை கலந்திருந்தது ஏற்கனவே தெரிந்த நிலையில், இப்போது ரசாயனக் கலப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனிதமான திருப்பதி லட்டுவின் தரத்தைச் சீரழித்து, கோடிக்கணக்கான இந்துக்களின் மத உணர்வுகளை முந்தைய அரசு புண்படுத்திவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், இனி வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடக்காமல் இருக்கத் திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

முன்னதாக நேற்று இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையத்தை சந்திரபாபு நாயுடு அமைத்தது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

Similar News