இந்தியா

டெல்லி: சாலையில் மூடப்படாத பள்ளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு.. 3 அரசு பொறியாளர்கள் பணியிடைநீக்கம்

Published On 2026-02-06 19:32 IST   |   Update On 2026-02-06 19:32:00 IST
  • பள்ளத்தில் விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
  • 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியின் ஜனக்புரி பகுதியில், சாலையில் மூடப்படாமல் இருந்த பள்ளத்தில் விழுந்து 25 வயது இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உயிரிழந்த இளைஞர் யுவராஜ் சிங் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஜனக்புரி மேம்பாலத்திற்கு அடியில் சென்றுகொண்டிருந்தார்.

அந்தப் பகுதியில் டெல்லி பொதுப்பணித் துறையின் தண்ணீர் சப்ளை அமைப்பான ஜல் போர்டு கட்டுமானப் பணிகள் நடந்து வந்தன.

இதற்காகத் தோண்டப்பட்ட பெரிய பள்ளம் முறையான எச்சரிக்கை பலகைகள் இன்றி மூடப்படாமல் இருந்துள்ளது.

இரவு நேரத்தில் இருட்டில் இந்தப் பள்ளத்தைக் கவனிக்காத யுவராஜ் சிங், தனது பைக்கோடு பள்ளத்தில் விழுந்தார்.

பள்ளத்தில் விழுந்த அவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கட்டுமானப் பணியின் போது பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை என்றும், பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அல்லது எச்சரிக்கை விளக்குகள் வைக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதற்கிடையே ஜல் போர்டை சேர்ந்த நிர்வாகப் பொறியாளர், உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகிய 3 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக நொய்டாவில் சாலையில் உள்ள பள்ளத்தில் பொறியாளர் ஒருவர் விழுந்து உயிரிழந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

Tags:    

Similar News