நீட் முதுகலை தகுதி மதிப்பெண்கள் குறைப்பு - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
- SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு, இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் சுமார் 65,000 முதல் 70,000 மருத்துவ மேற்படிப்பு இடங்கள் உள்ளன.
நீட் முதுகலை தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட பொது நல வழக்கு தொடர்பாக மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே அடங்கிய அமர்வு இன்று இந்த வழக்கை விசாரித்தது. அப்போது தேர்வே எழுதாதவர்கள் கூட இந்த கட்-ஆஃப் முறையால் சிறந்த நிலையில் இருக்கும் சூழல் உருவாவதாக மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனையடுத்து பூஜ்ஜியம் மற்றும் மைனஸ் 40 (-40) போன்ற மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்களையும் மருத்துவ மேற்படிப்பிற்குத் தகுதியானவர்களாக அறிவிப்பது நோயாளி பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தரத்தை பாதிக்கும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் காலியாக உள்ள 18,000-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்காக கட்-ஆஃப் குறைக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய தேர்வு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் பொதுப்பிரிவு மற்றும் EWS (பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்) மாணவர்களுக்கான தகுதித் தேர்ச்சி சதவீதம் 50-லிருந்து 7-ஆகவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 45-லிருந்து 5-ஆகவும், SC, ST மற்றும் OBC பிரிவு மாணவர்களுக்கு. இந்தத் தேர்ச்சி சதவீதம் 40-லிருந்து பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. இதில் எதிர்மறை மதிப்பெண் முறை உள்ளதால், அவர்களுக்கான தகுதி மதிப்பெண் 800-க்கு -40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்வை எழுதாதவர்கள் கூட இதைவிட சிறந்த நிலையில் இருப்பார்கள் என்று குறிப்பிட்டு, -40 மதிப்பெண் தகுதியை நீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது. மறுபுறம் இந்த விவகாரம் குறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், தற்போதைய நீட் பிஜி 2025-26 கவுன்சிலிங் செயல்முறைக்கு உச்சநீதிமன்றம் எந்தத் தடையும் விதிக்கவில்லை.