டாஸ்மாக் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை வழக்கு- தமிழக அரசின் வழக்கு வாபஸ்
- தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
- டாஸ்மாக் நிறுவன அமலாக்கத்துறை சோதனை வழக்குகளை முதலில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்கட்டும்.
டெல்லி:
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மார்ச் மாதம் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இந்த சோதனையின் அடிப்படையில் டாஸ்மாக் அதிகாரிகள் மீது மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டும், இந்த சோதனை சட்டவிரோதம் என்று அறிவிக்க கோரியும் சென்னை ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கிற்கு மத்திய அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்தது. இந்த பதில் மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதற்கிடையே அமலாக்கத்துறை சோதனை தொடர்பாக உச்சநீதிமன்றம் விசாரிக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழ்நாடு அரசு மற்றும் டாஸ்மாக் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் டாஸ்மாக் நிறுவன அமலாக்கத்துறை சோதனை வழக்குகளை முதலில் உயர்நீதிமன்றம் விசாரித்து முடிக்கட்டும். அதன் அடிப்படையில் விசாரிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, அமலாக்கத்துறை சோதனை வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய மனுக்களை திரும்ப பெறுகிறோம் என தமிழ்நாடு அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து திரும்பப் பெற அனுமதி வழங்கப்பட்டது.