இந்தியா

மாதந்தோறும் 5 கிலோ இலவச உணவு தானியம் திட்டம்: மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

Published On 2023-11-29 08:40 GMT   |   Update On 2023-11-29 08:40 GMT
  • கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
  • அடுத்த மாதத்துடன் முடிவடையும் நிலையில் நீட்டிக்க மத்திய மந்திரி சபை ஒப்புதல்.

கொரோனா வைரஸ் தொற்றின்போது நாடு தழுவிய ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அப்போது ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி சிரமப்பட்டார்கள்.

இதனால் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, ஏழை மக்களுக்கு 5 கிலோ உணவு தானியம் வழங்கப்பட்டது. அதனோடு தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கூடுதலாக ஐந்து கிலோ உணவு தானியங்கள் வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துடன் பிரதம மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் பலமுறை நீட்டிப்பிற்குப்பின் முடிவடைந்தது. அதன்பின் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்பட்டது.

இந்த திட்டம் வருகிற டிசம்பர் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது.. இந்த நிலையில் தற்போது மேலும் ஐந்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி முதல் ஐந்தாண்டு ஆண்டுகளுக்கு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

நேற்று பிரதமர் மந்திரி தலைமையில் மந்திரி சபை கூட்டம் நடைபெற்றது. அப்போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த ஐந்தாண்டுக்கு 80 கோடி பயனாளிகளுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியங்கள் வழங்க 11.8 லட்சம் கோடி ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News