இந்தியா

இலவச திருமண நிகழ்ச்சியில் கர்ப்ப பரிசோதனை- காங்கிரஸ் கண்டனம்

Published On 2023-04-24 03:30 GMT   |   Update On 2023-04-24 03:30 GMT
  • மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டது.
  • கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார்.

போபால்:

மத்திய பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் மாநில அரசு சார்பில் 219 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. கடாசரை நகரில் நேற்று முன்தினம் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகளுக்கு தலா ரூ.56 ஆயிரம் நிதியுதவியும் அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இது ஏழைகளை அவமதிக்கும் செயல் எனக்கூறியுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஓம்கார் சிங், எந்த விதிமுறைகளின் கீழ் இந்த பரிசோதனை நடத்தப்பட்டது? என்பதை அரசு விளக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

ஆனால் கர்ப்ப பரிசோதனை நடத்துவதற்கு எந்த அறிவுறுத்தலும் வழங்கப்படவில்லை என திண்டோரி மாவட்ட கலெக்டர் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். அந்த மணப்பெண்களுக்கு குறிப்பிட்ட நோய் பாதிப்பு தொடர்பான மருத்துவ பரிசோதனை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

அப்போது சில பெண்கள் மாதவிலக்கு பிரச்சினை இருப்பதாக கூறியதால், மருத்துவக்குழுவினரே அந்த பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தியதாகவும், இதில் 4 பெண்கள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததால், அவர்களை திருமணத்துக்கு அனுமதிக்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

Similar News