இந்தியா

பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் அவமதித்த மோடி - காங்கிரஸ் குற்றசாட்டு

Published On 2024-03-31 15:04 GMT   |   Update On 2024-03-31 15:04 GMT
  • எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்
  • பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது

முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தை சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல்-மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அதன்படி எல்.கே.அத்வானியை தவிர மற்ற 4 பேருக்கு நேற்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் அவர்களது குடும்பத்தினரிடம் ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கினார். வயது முப்பு காரணமாக எல்.கே.அத்வானிக்கு இன்று அவரது இல்லத்திற்கே ஜனாதிபதி திரவுபதி முர்மு நேரில் சென்று பாரத ரத்னா விருதை வழங்கினார்.

இந்நிலையில், பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அந்த பதிவில், "குடியரசுத் தலைவர் நிற்கிறார், பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். பழங்குடியின பெண் குடியரசுத் தலைவரை மீண்டும் பிரதமர் மோடி வேண்டுமென்றே அவமதித்துள்ளார்.

இது முதல் முறையல்ல - புதிய நாடாளுமன்றம் தொடங்கப்பட்டபோது, குடியரசு தலைவரை அழைக்கவில்லை, ராமர் கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் கூட அவரை அழைக்கவில்லை.

பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் மனநிலை பெண்களுக்கு எதிரானது மற்றும் தலித் மக்களுக்கு விரோதமானது என்பதை இந்த சம்பவங்கள் காட்டுகின்றன" என்று காங்கிரஸ் பதிவிட்டுள்ளது.

Tags:    

Similar News