West Bengal | வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியானவர்கள் பெயர் நீக்கப்படமாட்டாது - தலைமை தேர்தல் அதிகாரி
- மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் மிகவும் ஆழமாக இயங்குகிறது.
- தகுதியற்றவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததையும் தேர்தல் கமிஷன் உறுதி செய்யும்.
இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ஞானேஷ்குமார், மேற்கு வங்காள மாநில தேர்தல் ஏற்பாடுகள் குறித்த 2 நாட்கள் ஆய்வு கூட்டங்களில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
"மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் மிகவும் ஆழமாக இயங்குகிறது. வாக்குப்பதிவு சதவீதம் மிக அதிகமாக உள்ளது. வாக்காளர்களும், பொதுமக்களும் அரசியலமைப்பை மதிக்கிறார்கள். வன்முறை இல்லாத மற்றும் மிரட்டல் இல்லாத சூழ்நிலையில் வாக்குப்பதிவு நடைபெறுவதை தேர்தல் கமிஷன் நோக்கமாக கொண்டுள்ளது. சட்ட அமலாக்க முகமைகள் முழுமையான பாரபட்சமற்ற தன்மையுடன் செயல்படவும், பணம், மதுபானங் களை மாநில எல்லைக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளன."
இவ்வாறு அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் தொடர்பாக மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இடையே சூடான மோதல்கள் நடந்தன. சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு விவாதம் அனல் பறந்தது.
அதுகுறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு தேர்தல் அதிகாரி பதிலளிக்கும்போது, "அரசியலமைப்பு விதிமுறைகளின்படி நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை நடந்து வருகிறது.
வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் நோக்கம் வாக்காளர் பட்டியல் "தூய்மையாக" இருப்பதை உறுதி செய்வதாகும். வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியானவர்களின் பெயர் நீக்கப்படமாட்டாது. தகுதியற்றவர்களின் பெயர்கள் பட்டியலில் இல்லாததையும் தேர்தல் கமிஷன் உறுதி செய்யும்" என்றார்.