சிறார்களை கொடுமைப்படுத்திய விவகாரம்: காப்பகத்துக்கு சீல் வைத்த போலீசார்
- சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
- 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த குழந்தைகள் காப்பகத்தை வாத்ஸல்யபுரம் ஜெயின் டிரஸ்ட் அமைப்பினர் நடத்தி வந்தனர். அங்கு தங்கி இருக்கும் சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசாரணை அதிகாரி, "இங்கு தங்கியுள்ள சிறுவர்களை நிர்வாகிகள் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். சிறிய தவறு செய்தாலும் தலைகீழாக தொங்கவிடுதல், இரும்பு கம்பியால் சூடு போடுதல், கட்டி வைத்து அடித்தல், அடுப்பில் காய்ந்த மிளகாயை போட்டு நுகர்ந்து பார்க்க வைத்தல், உள்ளிட்ட பல கொடுமைகளை இங்குள்ள சிறுவர்கள் அனுபவித்து வந்துள்ளனர். 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காப்பக ஊழியர்கள் 5 பேர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.
இதுகுறித்து இந்தூர் கூடுதல்போலீஸ் கமிஷனர் அமரேந்திரசிங் கூறும்போது, "தற்போதுகாப்பகத்தை மூடி சீல் வைத்துள்ளோம். அங்கிருந்த குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் நலக்குழுவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.