செய்திகள்
தோல்வி பயத்தாலேயே விண்வெளி ஏவுகணை ரகசியத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது - ப.சிதம்பரம்
பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலேயே மிஷன் சக்தி ரகசியத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். #Chidambaram #MissionShakti #PMModi
புதுடெல்லி:
பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை மதியம் திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது என நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலேயே மிஷன் சக்தி ரகசியத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தைக் காப்பாற்றினார்கள். பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம்.
மேலும், தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் தோல்வி பயம் தான் காரணம் என பதிவிட்டுள்ளார். #Chidambaram #MissionShakti #PMModi