செய்திகள்

கோவாவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் - கவர்னரை சந்தித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கடிதம்

Published On 2019-03-18 08:38 GMT   |   Update On 2019-03-18 10:01 GMT
கோவா முதல் மந்திரி காலமானதால் சட்டசபையில் ஆளும்கட்சியின் பலம் குறைந்துள்ள நிலையில் ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என 14 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று கவர்னரை சந்தித்து கடிதம் அளித்தனர். #ManoharParrikar #Congressstakesclaim #Goagovernment
பனாஜி:

கோவா சட்டசபையில் உள்ள 40 இடங்களில் முன்னர் பெரும்பான்மை பலம் கொண்ட பாஜக 13 சொந்தக்கட்சி உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த 9 உறுப்பினர்களின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைத்தது.

முன்னாள் ராணுவ மந்திரியான மனோகர் பாரிக்கர் கோவா முதல் மந்திரியாக பதவி வகித்து வந்தார். சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர்.



இதற்கிடையில், பாஜகவை சேர்ந்த சட்டசபை உறுப்பினரான பிரான்சிஸ் டி சோசா என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடந்த 14-2-2019 அன்று காலமானார். இதனால், ஆளும்கட்சியான பாஜக சட்டசபையில் தற்போது ஒரு உறுப்பினரை இழந்துள்ளது. இதுதவிர 2 இடங்கள் ஏற்கனவே காலியாக இருந்தது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த கோவா முதல் மந்திரி மனோகர் நேற்றிரவு திடீரென்று மரணம் அடைந்ததையடுத்து ஆளும்கட்சியின் பலம் மேலும் குறைந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் இன்று பிற்பகல் கவர்னர் மிருதுளா சின்ஹாவை சந்தித்தனர். சட்டசபையில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி என்ற வகையில் காங்கிரஸ் தலைமையில் புதிய ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என்ற கடிதத்தை அவர்கள் கவர்னரிடம் அளித்தனர்.

இதற்கிடையில், கோவாவில் புதிய முதல் மந்திரியை தேர்வு செய்ய பாஜக மேலிட ஆலோசனை கூட்டம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெறும். புதிய முதல் மந்திரியின் பெயர் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என பாஜக சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. #ManoharParrikar #Congressstakesclaim  #Goagovernment 
Tags:    

Similar News