செய்திகள்

ரெயில்வே முன்னாள் மந்திரி ஜாபர் ஷரிப் காலமானார்

Published On 2018-11-25 08:05 GMT   |   Update On 2018-11-25 08:05 GMT
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ரெயில்வே துறை முன்னாள் மந்திரியுமான ஜாபர் ஷரிப்(85) பெங்களூரு நகரில் இன்று காலமானார். #FormerRailwayminister #CKJafferSharief
பெங்களூரு:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஜாபர் ஷரிப். அம்மாநில காங்கிரஸ் அமைப்பில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், 1991-95 ஆண்டுகளுக்கிடையில் பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அரசில் ரெயில்வே துறை மந்திரியாக பதவி வகித்துள்ளார்.

இவர் இந்த இலாகாவின் மந்திரியாக இருந்தபோதுதான் நாட்டிலுள்ள பல்வேறு ரெயில்வே வழித்தடங்கள் அகலப்பாதைகளாக மாற்றப்பட்டன. இதன் மூலம் நாட்டுக்கு ஏராளமான பணத்தை மிச்சப்படுத்தியதுடன், ரெயில்வே துறையின் வருமானமும் அதிகரித்தது.



நிஜலிங்கப்பா தலைமையிலான காங்கிரசில் இருந்து இந்திரா காந்தி பிரிந்து இந்திரா காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கியபோது கர்நாடக மாநிலத்தில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும்  இந்திரா காந்தியை ஆதரித்த தலைவர்களில் முக்கியமானவராகவும் ஜாபர் ஷரிப் இருந்தார்.

இந்நிலையில், சமீபகாலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த ஜாபர் ஷரிப், கடந்த வெள்ளிக்கிழமை ‘ஜும்மா’ தொழுகை முடிந்து காரில் ஏறச்சென்றபோது மயங்கி விழுந்தார். இதைதொடர்ந்து, பெங்களூரு நகரில் உள்ள தனியார் மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி தனது 85-வது வயதில் இன்று காலமானார்.

ஜாபர் ஷரிப் மறைவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #FormerRailwayminister #CKJafferSharief 
Tags:    

Similar News