செய்திகள்

வேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் - பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை

Published On 2018-11-12 20:37 GMT   |   Update On 2018-11-12 20:37 GMT
திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவிலில் வேறு மதத்தினர் நுழைந்ததாக எழுந்த சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். #PadmanabhaswamyTemple #Purification
திருவனந்தபுரம்:

திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சாமி கோவில், புகழ்பெற்ற ஆன்மிக தலமும், சுற்றுலா தலமும் ஆகும். அங்கு இந்து அல்லாத வேற்று மதத்தினர் வழிபட அனுமதி கிடையாது.

இந்நிலையில், கடந்த 9-ந் தேதி, ஒரு பக்தர்கள் குழு பத்மநாப சாமி கோவிலுக்கு வந்தது. குழுவில் இடம்பெற்றிருந்த சில பெண்கள், தலையை முக்காடு போட்டு மறைத்து இருந்தனர். பிறகு அவர்கள் உடை மாற்றும் அறையில், பாரம்பரிய இந்து உடைகளை அணிந்து கொண்டு, கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக, அவர்கள் தலையில் முக்காடுடன் இருந்தபோது, அவர்களை சில பக்தர்கள் படம் பிடித்தனர். அந்த படங்களை தந்திரிகளிடம் காண்பித்து, “அவர்கள் இந்துக்கள்தானா?” என்று சந்தேகம் எழுப்பினர்.

இதையடுத்து, அப்பெண்கள் வேற்று மதத்தினராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், பாரம்பரியத்துக்கு குந்தகம் ஏற்பட்டதற்காக, பரிகார பூஜை நடத்த தலைமை தந்திரி உத்தரவிட்டார். அதன்படி, பரிகார பூஜை நடத்தி முடிக்கப்பட்டதாக கோவில் ஊழியர்கள் தெரிவித்தனர். #PadmanabhaswamyTemple #Purification
Tags:    

Similar News