செய்திகள்

பாஜகவின் சித்தாந்த குரு மர்ம மரணம் - 50 ஆண்டுகால வழக்கு சிபிஐக்கு செல்கிறது

Published On 2018-09-22 03:46 GMT   |   Update On 2018-09-22 03:56 GMT
பாஜகவின் நிறுவன தலைவர்களில் ஒருவரான தீனதயாள் உபாத்தியாவின் மரணத்தில் 50 ஆண்டுகளாக உள்ள மர்மத்தை சிபிஐ விசாரிக்க உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. #BJP #DeendayalUpadhyaya
லக்னோ:

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாரதீய ஜன சங்கத்தை தொடங்கும் போது அவருடன் இணைந்து தலைமை பொறுப்பாற்றியவர் தீனதயாள் உபாத்தியா. பண்டிட்ஜி என அக்கட்சியினரால் அழைக்கப்படும் அவர் கடந்த 1968-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் முஹல்சராய் ரெயில் நிலைய தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

அவர் கொல்லப்பட்டரா? விபத்தா? என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது. இதற்கிடையே, கடந்த 2017-ம் ஆண்டு பாஜக உறுப்பினர் ராகேஷ் குப்தா, மத்திய உள்துறைக்கு எழுதிய கடிதத்தில், உபாத்தியா மரணம் தொடர்பாக புதிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். உபாத்தியா மரணத்தில் மிகப்பெரிய சதித்திட்டம் இருந்துள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் ரெயில்வே ஐஜி அளித்த அறிக்கையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் தொலைந்து போய் விட்டது. எனினும், காவல் நிலையத்தில் உள்ள பதிவேட்டில்  “வழக்கு தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டதாகவும், அதில் இருவரை கோர்ட் விடுதலை செய்து விட்டது எனவும், பாரத் ராம் என்ற ஒருவருக்கு 4 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் இருந்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாரத் ராம் தண்டிக்கப்பட்டது திருட்டு  மற்றும் வழிப்பறி வழக்கில் என்பதால் உபாத்யா மரணத்திற்கு பாரத் காரணமாக இருப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த குழப்பங்களை எல்லாம் தவிர்க்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட உத்தரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

உபாத்தியா சடலமாக கண்டெடுக்கப்பட்ட முஹல்சராய் நகரம் தற்போது தீனதயாள் உபாத்தியா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News