செய்திகள்
முழு அடைப்பு போராட்டத்தால் தமிழகம் - கர்நாடகம் இடையே பேருந்து சேவை நிறுத்தம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடுதழுவிய போராட்டம் இன்று நடைபெறும் நிலையில், தமிழகம் - கர்நாடகம் இடையேயான பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. #BharathBandh #PetrolDieselPriceHike
சென்னை:
வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும் எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. வணிகர் சங்கங்களும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
தொழிற்சங்கங்களும் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான ஆட்டோக்கள், வேன்கள், லாரிகள் இயக்கப்படவில்லை. அதேநேரத்தில் அரசு பஸ்கள் வழக்கம்போல் இயங்கி வருகிறது. அரசு பஸ்களை போலீஸ் பாதுகாப்புடன் இயக்க போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
கர்நாடக மாநிலத்தில் முழு அடைப்புக்கு ஆதரவு தெரிவித்து பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முழு அடைப்பு காரணமாக கர்நாடகாவிற்கு இயக்கப்படும் தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் மற்றும் சத்தியமங்கலத்தில் நிறுத்தப்பட்டன. தமிழகத்திற்கு இயக்கப்படும் கர்நாடக அரசுப்பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. தமிழகம் - கேரளாவுக்கு இடையேயான பேருந்து சேவைகளும் நிறுத்தப்பட்டன.
இன்றும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு 25 காசுகள் உயர்ந்து ரூ. 83.91-க்கும், டீசல் 23 காசுகள் உயர்ந்து ரூ. 76.98-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த முழு அடைப்பு போராட்டம் காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெறுகிறது. #BharathBandh #PetrolDieselPriceHike