செய்திகள்

முத்தலாக் மசோதா நிறைவேறாததற்கு ராகுலும், காங்கிரசும் காரணம் - பாஜக குற்றச்சாட்டு

Published On 2018-08-11 00:35 GMT   |   Update On 2018-08-11 00:35 GMT
மாநிலங்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேற்றப் படாததற்கு ராகுல் காந்தியும், காங்கிரசும் தான் காரணம் என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. #MonsoonSession #TripleTalaqBill
புதுடெல்லி:

முத்தலாக் சட்ட மசோதா, முஸ்லீம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் கடந்த பாராளுமன்ற கூட்டத் தொடரின்போது மக்களவையில் நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கான பெரும்பான்மை பலம் பாஜக அரசுக்கு இல்லை. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் கிடப்பில் போடப்பட்டது. 

தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில் இந்த சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டது. இதற்காக மசோதாவில் மூன்று முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டு, நேற்று முன்தினம் மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது.

இதையடுத்து முத்தலாக் மசோதாவை நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கட்சிகளிடையே ஒருமித்த கருத்தொற்றுமை ஏற்படாததால் தாக்கல் செய்யப்படவில்லை. மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்பியபின் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. 

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. எனவே, முத்தலாக் மசோதா மீண்டும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இதுதொடர்பாக பாராளுமன்ற விவகார துறை மந்திரி ஆனந்த் குமார் கூறுகையில், பிரதமர் மோடி முஸ்லிம் பெண்களின் நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டவர். எனவே தான், முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற கடைசி வரை போராடினோம்.

ஆனால், முத்தலாக் சட்ட மசோதாவை நிறைவேற்ற விடாமல் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் தடுத்து விட்டனர். அவர்கள் தான் முத்தலாக் சட்ட மசோதா நிறைவேறாததற்கு காரணம் என குற்றம் சாட்டியுள்ளார். #MonsoonSession #TripleTalaqBill
Tags:    

Similar News