செய்திகள்

இந்து தாலிபான் என வக்கீல் கருத்து - சுப்ரீம் கோர்ட் அறையில் அசாதாரண சூழலால் பரபரப்பு

Published On 2018-07-20 17:17 IST   |   Update On 2018-07-20 17:17:00 IST
அயோத்தி வழக்கு விசாரணையில், இந்து பயங்கரவாதம் என வக்கீல் ராஜீவ் தவான் வாதிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வக்கீல் ஒருவர் தவானை நோக்கி முன்னேறியதால் சுப்ரீம் கோர்ட் அறையில் பரபரப்பு ஏற்பட்டது. #Ayodhya
புதுடெல்லி:

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்துக்கு பல்வேறு தரப்பினர் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட், சர்ச்சைக்குரிய நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா, ராம் லீலா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கடந்த 2010-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து 13 அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளன.

இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷண், ஏ.எஸ்.நஜீப் அமர்வு முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி முதல் விசாரிக்கப்பட்டு வருகிறது. பல கட்டமாக நடந்து வரும் விசாரணையில் இடைக்கால தீர்ப்புகளை வழங்கக்கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

ஆனால், மூல வழக்கின் விசாரணை முடியாமல் இடைக்கால உத்தரவுகள் பிறப்பிக்க முடியாது என கூறிய நீதிபதிகள் அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தனர். 

இந்நிலையில், இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “டிசம்பர் 6 அன்று நடந்தது பயங்கரவாதத்திற்கு ஒப்பானது. அன்றைய தினம் இந்துக்கள் தாலிபான்களை போல நடந்து கொண்டனர்” என தனது பேச்சில் குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, ராஜீவ் தவானின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் எழுப்பி மற்றொரு வக்கீல், ராகுல் தவானை நோக்கி முன் நகர்ந்து வந்தார். இதனால், கோர்ட் அறையில் அசாதாரண சூழல் ஏற்பட்டது. உடனே, சுதாரித்துக்கொண்ட பாதுகாப்பு அதிகாரிகள் அந்த வக்கீலை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

வழக்கு விசாரணை முடிந்த பின்னர், இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது தொடர்பான உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.  
Tags:    

Similar News