பெண்கள் பெயரில் 2000 ஆண் மாணவர்கள் - மோசடியில் ஈடுபட்ட 3 கல்லூரிகள் சிக்கியது எப்படி?
- அதிக பெண் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை அங்கேயே நடத்தி கொள்ளலாம்.
- ஆண் மாணவர்களின் எண்ணிக்கை பெண் மாணவர்களை விட அதிகமாக இருப்பது சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்துடன் இணைந்த 3 தனியார் கல்லூரிகளில் சுமார் 2000 ஆண் மாணவர்கள் பெண் மாணவர்களாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதை பல்கலைக்கழக நிர்வாகம் கண்டுபிடித்துள்ளது.
மேஜர் அங்கத் சிங் மகாவித்யாலயா, SBD அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி மற்றும் குல்கண்டி லாலராம் மகாவித்யாலயா ஆகிய மூன்று கல்லூரிகளில் முறைகேடுகள் நடந்ததாக பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஓம் பிரகாஷ் தெரிவித்தார்.
இந்த 3 தனியார் கல்லூரிகளில் நவம்பர் 21 அன்று முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை பெண் மாணவர்களை விட அதிகமாக இருப்பதும் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது. சில தேர்வு அறைகள் முழுவதும் ஆண் மாணவர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.
அதிக பெண் மாணவர்களைக் கொண்ட கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளிலேயே செமஸ்டர் தேர்வுகளை நடத்திக்கொள்ள இப்பல்கலைக்கழகம் அனுமதித்துள்ளது. மேலும் செமஸ்டர் தேர்வுகளில் தங்கள் கல்லூரியின் ஊழியர்களையே தேர்வு கண்காணிப்பாளர்களாக கல்லூரி நிர்வாகம் நியமிக்க முடியும்.
ஆகவே, பெண் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டி, முறைகேடுகளில் ஈடுபட்டு கல்லூரிகளின் தேர்ச்சி விகிதத்தை அதிகப்படுத்த கல்லூரி நிர்வாகிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளனரா என்ற கோணத்தில் என்று பல்கலைக்கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.