இந்தியா

12 வருட பழைய வழக்கில் 2 ராஜஸ்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு ஓராண்டு சிறை!

Published On 2025-06-19 05:34 IST   |   Update On 2025-06-19 05:34:00 IST
  • ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
  • தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில், 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சாலை மறியல் சம்பவம் தொடர்பான வழக்கில், ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதித்து ஜெய்ப்பூர் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கேஷ் பாகர் மற்றும் மனீஷ் யாதவ் ஆகிய இரு எம்.எல்.ஏ.க்கள், மேலும் ஏழு பேருடன் சேர்ந்து, ஜெய்ப்பூரின் முக்கிய சாலையான ஜவஹர்லால் நேரு மார்க்கில் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

2014 ஆகஸ்ட் 13 அன்று, இந்த குழு, காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சவுத்ரி உட்பட, ராஜஸ்தான் மாநில சட்டமன்றத்திற்கு வெளியே ஒரு போராட்டத்தை நடத்தியது. ராஜஸ்தான் பல்கலைக்கழகத்திற்கு வெளியே உள்ள பிரதான சாலையை சுமார் 20 நிமிடங்கள் முழுமையாக மறித்ததால், கடுமையான போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது.

இந்த வழக்கு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீதிமன்ற விசாரணையில் இருந்த நிலையில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குற்றவியல் சட்டத்தின்படி ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்பதால், தண்டனை விதிக்கப்பட்ட அனைவரையும் நீதிமன்றம் உடனடியாக ஜாமீனில் விடுவித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அவர்களுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தின்படி, எம்எலஏக்களின் பதவி, தண்டனை இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் மட்டுமே ரத்து செய்யப்படும். இதனால், இந்தத் தீர்ப்பு இரு எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பாதிக்காது.

Tags:    

Similar News