செய்திகள்

அதிமுக தொண்டர்களால் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளேன்- திருநாவுக்கரசர் எம்பி

Published On 2019-05-27 09:58 GMT   |   Update On 2019-05-27 09:58 GMT
அ.தி.மு.க. தொண்டர்கள் அளித்த வாக்கால் அதிக வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன் என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
திருச்சி:

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் திருச்சி தொகுதியில், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிட்டு சுமார் 4.59 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இதையடுத்து அவர் புதுக்கோட்டை பழைய பஸ் நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., அம்பேத்கர் சிலை, சத்தியமூர்த்தி சிலை, அண்ணாசிலை மற்றும் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இதுவரை அ.தி.மு.க.வினர் மட்டும் தான் 3 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் இந்த முறை நான் 4.59 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறேன்.


அ.தி.மு.க.வின் வாக்கு வங்கியாக இருந்த ஸ்ரீரங்கம் தொகுதியில் கூட இந்த முறை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கை சின்னத்திற்கு கிடைத்துள்ளது. அதே போல புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் அதிகமான வாக்குகள் எனக்கு கிடைத்துள்ளது.

அதாவது உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எனக்கு வாக்களித்து இருக்கிறார்கள். நடுநிலையாளர்களும் எனக்கே வாக்களித்து உள்ளனர்.

மேலும் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை தவிர அ.தி.மு.க.வில் உள்ளவர்களும் எனக்கு வேண்டிய, எனக்கு பழக்கமான, என் நீண்ட நாள் நண்பர்கள் என பலர் மற்றும் ஏராளமான அ.தி.மு.க.வினரும் எனக்கு வாக்களித்துதான் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றேன்.

அ.தி.மு.க. தலைவர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து இருந்தாலும் இங்கு உள்ளவர்கள் தே.மு.தி.க. வேட்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பு தரவில்லை. இதனால் தான் எனக்கு வெற்றி வாய்ப்பு சரியாக இருந்தது.

3 மாதங்களுக்கு முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தநிலையில் பிற மாநிலங்களில் ஒரு சீட்டு கூட பெற முடியாமல் போனதற்கு என்ன காரணம் என காங்கிரஸ் கட்சி ஆராயும். எதிர்க்கட்சியினர் பெற்றிருக்கும் வெற்றி உரிய முறையில் உள்ளதா? மீண்டும் வாக்குச் சீட்டு முறை சரியாக இருக்குமா? என்றெல்லாம் ஆராய வேண்டும்.

மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழவில்லை என்றாலும் வாக்களித்த மக்களின் கோரிக்கைகளை போராடி, வாதாடி மக்களுக்கு பெற்றுத்தருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News