செய்திகள்
பாஜகவின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு நன்றி - பியூஷ் கோயல்
சென்னையில் பேட்டியளித்த மத்திய மந்திரி பியூஷ் கோயல் கூறுகையில், பா.ஜ.க.வின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு அளித்த நடிகர் ரஜினிக்கு நன்றி என தெரிவித்தார். #PiyushGoyal #Rajinikanth
சென்னை:
பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வின் தமிழக பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டவர் மத்திய மந்திரி பியூஷ் கோயல்.
பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் இன்று சென்னைக்கு வந்தார். அவர் பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நதிகள் இணைப்பே தண்ணீர் பிரச்சனைக்கு சரியான தீர்வாக இருக்கும். காங்கிரஸ் ஆட்சியில் நதிகளை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பா.ஜ.க.வின் நதிகள் இணைப்பு திட்டத்திற்கு வரவேற்பு தெரிவித்த நடிகர் ரஜினிக்கு நன்றி. பிரதமர் மோடி தலைமையில் அடுத்து அமையும் அரசில், தமிழக பிரதிநிதிகளின் குரல் எதிரொலிக்கும். 2022-ம் ஆண்டில் மீனவர்களின் வருமானம் இரட்டிப்பாகும்.
நீட் தேர்வு தேவையில்லை என அதிமுக கூறவில்லை. நீட் தேர்வை தமிழில் எழுத வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது; அதை ஏற்றுக் கொண்டோம் என தெரிவித்தார். #PiyushGoyal #Rajinikanth