திருப்பூரில் பறக்கும் படை சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திருப்பூர் - மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த திருப்பூர் சிவசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த இளமணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தனது கம்பெனியில் வசூலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி சென்றனர். திருப்பூரில் இதுவரை ரூ. 10 லட்சம் வரை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளது. #Parliamentelection #LSPolls