பெண்ணை வெட்டிக்கொன்ற கள்ளக்காதலன்
- போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
- சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
பழனி:
பழனி மதனபுரம் பகுதியை சேர்ந்தவர் பஷிராபேகம் (வயது 45). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இவரது கணவர் இறந்து விட்டார். இதனால் திருஆவிணன்குடி கோவில் சாலையில் டீக்கடை மற்றும் துணிக்கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்நிலையில் இவருக்கும் அடிவாரம் சரவணப் பொய்கை சாலையை சேர்ந்த மாரிமுத்து (45) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த விவரம் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு தெரியவரவே கண்டித்துள்ளனர். இதனால் மாரிமுத்துவுடன் பேசுவதை அவர் தவிர்த்து வந்துள்ளார். இருந்த போதும் அவருடன் பேச மாரிமுத்து முயன்றுள்ளார். ஆனால் பிடிவாதமாக பஷிராபேகம் தவிர்த்து வந்ததால் இன்று காலை அரிவாளுடன் மாரிமுத்து அவரது கடைக்குச் சென்றார்.
அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மாரிமுத்து தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினார். அவர் உயிருக்கு பயந்து ஓடியபோதும் துரத்தி வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற பயத்தில் தானும் வெட்டி தற்கொலைக்கு முயன்றார். இதனால் மாரிமுத்துவுக்கும் வெட்டுக் காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பழனி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் காயமடைந்த மாரிமுத்துவையும் சிகிச்சைக்காக பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இந்த சாலை பழனி கோவிலுக்கு செல்லும் முக்கிய சாலையாகும். அந்த பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக சென்று வந்த போது நடந்த கொலை சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்த அப்பகுதி மக்களும் அலறியடித்து ஓடத்தொடங்கினர். சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.