உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டுகள் வழங்கப்படுமா?

Published On 2022-07-05 07:38 GMT   |   Update On 2022-07-05 07:38 GMT
  • இரு வாரங்களாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வரும் நிலையில் நோட்டுகள் எப்போது கிடைக்கும் என தெரியாமல் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
  • பல ஆண்டுகளாக இலவச நோட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது.

உடுமலை :

உடுமலை கல்வி மாவட்டத்தில் 168 அரசு தொடக்க பள்ளிகள், 39 நடுநிலை பள்ளிகள், 16 உயர்நிலைப் பள்ளிகள், 16 மேல்நிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன.இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப்பை, சீருடை, காலணி, வண்ணப்பென்சில், கணித உபகரண பெட்டி, பஸ் பயண அட்டை, புவியியல் வரைபட புத்தகம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் 13-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. ஆனால் நோட்டு உள்ளிட்ட பிற நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவில்லை. இரு வாரங்களாக ஆசிரியர்கள் பாடம் நடத்தி வரும் நிலையில்நோட்டுகள் எப்போது கிடைக்கும் என தெரியாமல் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். சிலர் சொந்த செலவில் நோட்டுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:-

அவ்வப்போது துறை ரீதியான அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்கின்றனர். அப்போது மாணவர்களின் நோட்டுகளை சரிபார்க்க கோரி மாணவர்களிடம் கேள்வி எழுப்பினால், இன்னும் நோட்டுகள் தரவில்லை என்கின்றனர். அதே பதிலை ஆசிரியர்களும் தெரிவிக்கும்போது கடிந்து கொள்கின்றனர். பல ஆண்டுகளாக இலவச நோட்டுகள் வழங்கப்பட்ட நிலையில் இந்தாண்டு வழங்கப்படாமல் உள்ளது.சில பள்ளிகளில் தலைமையாசிரியர்களும், ஆசிரியர்களும் ஒன்றிணைந்து சொந்த செலவில் எழுது பொருட்களையும் நோட்டுகளையும் விலைக்கு வாங்கி மாணவர்களுக்கு அளித்து வருகின்றனர். விரைந்து நோட்டுகள் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News