குழந்தைகளுக்கு கல்வியை கொடுப்போம் - கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி
- உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது.
- குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.
திருப்பூர் :
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2 சார்பாக உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் பனியன் நிறுவனத்தில் அனுசரிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக தொழில் அதிபர் மெஜஸ்டிக் கந்தசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறுகையில், குழந்தைகள் நமக்கு தெய்வம் தந்த வரம், அவர்கள் எதிர்காலம் சிறக்க நல்ல குழந்தைகளாக வளர்க்க வேண்டும். குழந்தைகளை வேலைக்கு பணியமர்த்துவதை தடுக்க வேண்டும்.அவர்களுக்கு நல்ல கல்வியை தரவேண்டும். பள்ளிக்கு செல்லாத குழந்தைகளை கண்டறிந்து அவர்களை பள்ளிக்கு செல்ல ஊக்குவிக்க வேண்டும் என்றார்.
மேலும் ஒவ்வொரு குழந்தை தொழிலாளி உருவாகும் போது எண்ணற்ற சாதனையாளர்களை இழக்கிறோம்.நாட்டின் எதிர்காலம் இருண்டு விடும் என்றார். பிறகு மாணவ செயலர்கள் விஜய், ராஜபிரபு, பூபதிராஜா ஆகியோர் தலைமையில் பனியன் தயாரிக்கும் நிறுவனத்தில் அனைவருக்கும் சமூகநீதி, குழந்தை தொழிலாளர் முறைக்கு முடிவு கட்டுங்கள் என்ற மைய கருத்தை வலியுறுத்தி அங்குள்ள தொழிலாளர்களுடன் இணைந்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் கிருஷ்ணன் செய்திருந்தார்.