உள்ளூர் செய்திகள்

அமராவதி அணையில் இருந்து ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை படத்தில் காணலாம். திருப்பூர் குமரன் சாலை பகுதியில் இன்று காலை மழை பெய்ததையும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்து சென்றதையும் படத்தில் காணலாம்.

  

திருப்பூர் மாவட்டத்தில் தொடர் மழை - நிலத்தடி நீர்மட்டம் உயர்வு, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2022-11-13 07:50 GMT   |   Update On 2022-11-13 07:50 GMT
  • திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
  • அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

திருப்பூர் :

திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று மாலை வரை இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் குளம் போல் மழைநீர் தேங்கியது. சிதலமடைந்த சாலைகள் சகதிக்காடாக மாறின.

மாவட்டத்திற்குட்பட்ட உடுமலை, பல்லடம், தாராபுரம், காங்கயம், அவினாசி உள்பட அனைத்து பகுதிகளிலும் மழைநீடித்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன் வீடுகளுக்குள் முடங்கினர். சில இடங்களில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளதால் அதனை அகற்றும் பணியில் உள்ளாட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

உடுமலை வனப்பகுதியில் பெய்த மழை காரணமாக திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உடுமலை அமராவதி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றில் 6832 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.இதனால் கரையோர மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் முழுவதும் நேற்று மாலை வரை மழை பெய்த நிலையில் அதன்பிறகு நின்றது. இன்று காலை மாவட்டம் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இரவு முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் முதியவர்கள் பாதிக்கப்பட்டனர். தாராபுரம், காங்கயம் பகுதியில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன.

மாவட்டம் முழுவதும் நேற்று பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் விவரம் வருமாறு :- திருப்பூர் வடக்கு-16, அவினாசி-6, பல்லடம் -32, ஊத்துக்குளி-6, காங்கயம்-28, தாராபுரம்-43, மூலனூர்-34, குண்டடம்-25 திருமூர்த்தி அணை -27, அமராவதி அணை- 39, உடுமலை-38.20, மடத்துக்குளம் -76, திருப்பூர் கலெக்டரேட்-7, வெள்ளகோவில் ஆர்.ஐ. அலுவலகம் -35, திருமூர்த்தி அணை (ஐ.பி.) -25, திருப்பூர் தெற்கு-15, கலெக்டர் முகாம் அலுவலகம் - 20.40,உப்பாறு அணை -75, நல்லதங்காள் ஓடை -34,வட்டமலைக்கரை ஓடை- 56.40. மாவட்டம் முழுவதும் மொத்தம் 638மி.மீ. மழை பெய்துள்ளது.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையின் காரணமாக நொய்யலாற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் திருப்பூர் நொய்யல் ஆற்றில் உள்ள நல்லம்மன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

நொய்யல் ஆற்றில் திடீரென்று மழை நீர் வெள்ளம் அதிக அளவில் வருவதால் ஒரத்துப்பாளையம் அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படாமல் நேற்று காலை முதல் வரும் மழை நீர் அப்படியே திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் நத்தக்காடையூர் அருகே புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் செல்லும் நொய்யல் ஆற்றில் நேற்று மதியம் 12 மணி முதல் மழைநீர் திடீரென்று அதிக அளவில் வந்து ஆற்றின் இரு கரைகளையும் தொட்டபடி சீறி பாய்ந்து கரைபுரண்டு செல்கிறது. இதனால் இப்பகுதியில் உள்ள நொய்யல் ஆற்று தாழ்வான தரைப்பாலம் மழைநீரில் மூழ்கியது. இதன் காரணமாக தரை பாலத்தின் வழியாக செல்லும் பகுதிக்கான சாலையில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் கனரக, இருசக்கர வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.

இன்று காலை திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். மேலும் தொடர் மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதுடன் குளம், குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மழைநீரை பயன்படுத்தி சாகுபடி பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News