உள்ளூர் செய்திகள்
கோடை விடுமுறையால் ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
- ஒரே நேரத்தில் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது
- வாகன ஓட்டிகள் அவதி
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது.
விடுமுறை நாட்களில் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இங்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் விளையாட்டுக் கூடங்கள் அமைந்துள்ளன.
மேலும் அரசு சுற்றுலாத் தலங்களான படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, உள்ளன. கடந்த 2 நாட்களாக அனைத்து சுற்றுலா தளங்களும் அதிக கூட்டம் நெரிசலோடு காணப்பட்டன.
நேற்று இங்கு உணவு விடுதிகளும், தங்கும் விடுதிகளும் கூட்டத்தால் அலைமோதின. நேற்று மாலை ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்று வீடு திரும்பும் போது ஒரே நேரத்தில் வாகனத்தில் திரும்பியதால் நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.