ஏலகிரி மலையில் பைக்கில் இருந்து விழுந்த கல்லூரி மாணவன் சாவு
- நண்பர்களுடன் சுற்றுலா சென்றபோது பரிதாபம்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
ஏலகிரி மலைக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பலியானார். 2 பேர் காயமடைந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட புத்துக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் மோகன் குமார் (வயது 17), வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அதேப் பகுதியை சேர்ந்தவர்கள் சேகர் என்பவரின் தினேஷ் (19) மற்றும் சவுந்தர். இவர்களும் அதே கல்லூரியில் படித்து வருகின்றனர்.
இவர்கள் 3 பேரும் நேற்று ஏலகிரி மலைக்கு சென்று ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு இடங்களை பார்த்து விட்டு 3 பேரும் ஒரே பைக்கில் வீட்டிற்கு திரும்பினர்.
14-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள முத்தனாவூர் அருகே சென்றபோது பைக் நிலை தடுமாறி சாலையில் விழுந்தது. இதில் மோகன்குமார் உள்பட 3 பேரும் படுகாயமடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஏலகிரி மலை போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் மோகன்குமார் மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மோகன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.