உள்ளூர் செய்திகள்

சிங்காநல்லூர் அருகே வீட்டின் கதவை உடைத்து நகைகள் கொள்ளை

Published On 2023-09-05 14:33 IST   |   Update On 2023-09-05 14:33:00 IST
  • திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றபோது சம்பவம்
  • செயின், கம்மல், வளையல் உள்பட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை அள்ளி சென்றனர்

கோவை,

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் இந்திரா கார்டனை சேர்ந்தவர் மாரியப்பன். விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று மாரியப்பன் வேலை விஷயமாக வெளியூர் சென்று இருந்தார்.

அவரது மனைவி மாரியம்மாள் தனது 2 மகள்களுடன் திருப்பூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார்.

அப்போது மாரியப்பன் வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், கம்மல், வளையல் உள்பட ரூ.40 ஆயிரம் மதிப்பிலான தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

வீட்டின் கதவு திறந்து இருப்பதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் இதுகுறித்து மாரியம்மாளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர் தனது வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த நகைகள் கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது.

பின்னர் அதிர்ச்சியடைந்த அவர் அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து மாரியப்பன் கோவைக்கு விரைந்து வந்தார். பின்னர் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விற்பனை பிரதிநிதி வீட்டில் நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News