உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை அருகே பெண் வெட்டிக்கொலை

Published On 2024-04-16 07:15 GMT   |   Update On 2024-04-16 07:15 GMT
  • சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செங்கோட்டை:

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் ராஜீவ் நகரை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மனைவி கோமதி (வயது 42). இவர்களது மகள் பவித்ரா(24) என்பவருக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தென்காசி அருகே உள்ள மேலமெஞ்ஞானபுரத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் திருமணமாகி 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பவித்ரா தனது கணவரை பிரிந்து விஸ்வநாதபுரத்தில் தனது தாயாருடன் வசித்து வருகிறார். மேலும் அவர் குத்துக்கல்வலசையில் உள்ள ஒரு கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

நேற்று மாலை கோமதியும், பவித்ராவும் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த 2 வாலிபர்கள் பவித்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயன்றனர். உடனே கோமதி அதனை பார்த்து அவர்களை தடுக்க முயன்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 2 வாலிபர்களும் அரிவாளால் கோமதியை சரமாரியாக வெட்டினர். அதனை தடுக்க வந்த பவித்ராவுக்கும் கழுத்து, தோள்பட்டை, மணிக்கட்டு உள்ளிட்ட இடங்களில் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தனர். உடனே அந்த 2 வாலிபர்களும் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று, உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கோமதி மற்றும் பவித்ரா ஆகியோரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறிது நேரத்திலேயே கோமதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். பவித்ராவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து செங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பவித்ரா கடையில் வேலை பார்த்தபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பவித்ராவை பிடித்துள்ளது. உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பவித்ராவை அந்த வாலிபர் அடிக்கடி தொந்தரவு செய்து வந்ததாகவும், ஆனால் பவித்ரா அதற்கு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அந்த வாலிபர் தனது நண்பரை அழைத்து வந்து இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News