தமிழ்நாடு செய்திகள்

பாராளுமன்றத்தில் முதல்முறையாக தடம் பதிக்கும் தே.மு.தி.க.

Published On 2026-03-04 14:13 IST   |   Update On 2026-03-04 14:13:00 IST
  • 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 10 ஆக அதிகரித்தது.
  • தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி தி.மு.க. கூட்டணியில் சேர்ந்துள்ள தே.மு.தி.க.வுக்கு ஒரு மேல் சபை எம்.பி. பதவி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த கட்சியின் சார்பில் தே.மு.தி.க. பொதுச்செயலாளரான பிரேமலதாவின் தம்பியும், தே.மு.தி.க. பொருளாளருமான எல்.கே.சுதீஷ் மேல்சபை எம்.பி.யாக உள்ளார்.

தே.மு.தி.க. தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆகும் நிலையில் இதுவரை பாராளுமன்றத்தில் அந்தக் கட்சி கால் பதிக்காமலேயே இருந்து வந்தது.

2005-ம் ஆண்டு தே.மு.தி.க.வை தொடங்கிய விஜயகாந்த் அடுத்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலேயே வெற்றிக் கணக்கை தொடங்கினார். விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு அந்த தேர்தலில் விஜயகாந்த் வெற்றி பெற்ற நிலையில் தே.மு.தி.க. 8 சதவீத வாக்குகளை பெற்றது.

இதன் பிறகு 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வின் வாக்கு சதவீதம் 10 ஆக அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்த தே.மு.தி.க. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் எட்டிப் பிடித்தது.

இப்படி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தே.மு.தி.க. பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.

இது போன்ற சூழலில் முதல் முறையாக கட்சி தொடங்கப்பட்டு 20 ஆண்டுகளாகும் நிலையில் தி.மு.க. மூலமாக பாராளுமன்றத்தில் தே.மு.தி.க தடம் பதிக்க உள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் ஏற்கனவே தே.மு.தி.க.வுக்கு மேல்சபை எம்.பி. பதவி தருவதாக உறுதி அளிக்கப்பட்டு அது நிறைவேற்றப்படாததால் அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறிய பிரேமலதா சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் கைகோர்த்து மேல்சபை எம்.பி. பதவியை பெற்றிருப்பது அந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்முறையாக டெல்லியில் எங்கள் முரசு கொட்டப்போகிறது என்று அந்த கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். தமிழக சட்டமன்ற தேர்தலில் 2011-ம் ஆண்டுக்கு பிறகு தே.மு.தி.க. தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வந்துள்ளது.

2016-ம் ஆண்டு நடைபெற்ற மக்கள் நல கூட்டணியில் விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியதை மக்கள் ஏற்றுக்கொள்ளாத நிலையில் கடந்தாண்டு அ.தி.மு.க. வுடன் கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தே.மு.தி.க., டி.டி.வி. தினகரனுடன் கைகோர்த்தது.

அந்தக் கூட்டணியும் தே.மு.தி.க.வுக்கு கை கொடுக்காத நிலையில் முதல் முறையாக தி.மு.க. வுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலை தே.மு.தி.க. சந்திக்க உள்ளது.

இதன் மூலம் 2011-ம் ஆண்டுக்கு பிறகு சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவில்லை என்கிற ஏக்கம் தீரும் என்றும், நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவோம் என்றும் தே.மு.தி.க.வினர் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News