கருணாநிதி 4-ம் ஆண்டு நினைவுநாள்: மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினர் அமைதிப்பேரணி
- திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கருணாநிதி நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
- கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக அமைதிப் பேரணி நடைபெறாமல் இருந்தது.
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதியின் 4-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
இதையொட்டி ஒவ்வொரு ஊரிலும் இன்று அவரது உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அமைதிப் பேரணியும் நடத்தப்பட்டன. சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
இதையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் முழு உருவ சிலை அருகே அவரது உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் படத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து முக்கிய பிரமுகர்களும் மலர் தூவி வணங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
பேரணியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் நடந்து சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., தயாநிதி மாறன் எம்.பி., ஆ.ராசா, மு.க.தமிழரசு, அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், ஆவடி சா.மு.நாசர், சக்கரபாணி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், ஜெகத்ரட்சகன் எம்.பி., தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட பொறுப்பாளர் நே.சிற்றரசு, மாதவரம் சுதர்சனம்.
வில்சன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தி.நகர் ஜெ.கருணாநிதி, இனிகோ இருதயராஜ், ஏ.எம்.வி.பிரபாகர ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.பி.ராஜா, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல்.
பகுதிச் செயலாளர், கே.ஏழுமலை, சேப்பாக்கம் மதன் மோகன், மாவட்ட பொருளாளர் ஐ.கென்னடி, பகுதி துணை செயலாளர் சேப்பாக்கம் சிதம்பரம், புழல் நாராயணன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவரான குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், தாம்பரம் துணை மேயர் காமராஜ், பல்லாவரம் மண்டல குழுத் தலைவர் ஜோசப் அண்ணாத்துரை, பல்லாவரம் மு.ரஞ்சன், நித்யா, பாக்கியராஜ், தி.நகர் பி.மாரி, சோமசுந்தரம், உதயசூரியன், மாவட்ட பிரதிநிதி பாண்டி பஜார் பாபா சுரேஷ் உள்பட ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அமைதிப் பேரணியில் நடந்து வந்தனர்.
இவர்களில் ஏராளமானோர் கருப்புச் சட்டை அணிந்திருந்தனர். தொண்டர்கள் பலர் தி.மு.க. கொடி ஏந்தி அமைதிப் பேரணியில் பங்கேற்றனர்.
அமைதிப் பேரணி கருணாநிதி நினைவிடத்தை அடைந்ததும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மலர் தூவி வணங்கி அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த கருணாநிதியின் மார்பளவு சிலைக்கும் மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து தலைமைக் கழக நிர்வாகிகளும், பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்துக்கு சென்று கருணாநிதியின் உருவப் படத்துக்கு மலர் தூவி வணங்கினார்.
பின்னர் அண்ணா அறிவாலயம் சென்று கருணாநிதியின் சிலைக்கு மலர் தூவி வணங்கினார்.
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் கருணாநிதி நினைவிடம் சென்று மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டாக அமைதிப் பேரணி நடைபெறாமல் இருந்தது. இதனால் இந்த ஆண்டு நடைபெற்ற அமைதி பேரணியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க.வினர் பல்லாயிரகக்கணக்கில் பங்கேற்றனர்.